தமிழ் வழக்குகளை அறிந்து கொள்ளல்.

கீழுள்ள கேள்விகளுக்கான விடைகளைச் சுருக்கித் தருக.

1.வழக்கு எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன, 

1) இயல்பு வழக்கு 

2) தகுதி வழக்கு

 

2.இயல்பு வழக்கு என்றால் என்ன? 

எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லாற் கூறுவது இயல்பு வழக்கு எனப்படும்.

 

3.இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்? அவை எவை?

 மூன்று வகைப்படும். 

அவையாவன: 

1) இலக்கணமுடையது 

2) இலக்கணப்போலி 

3) மரூஉ 

 

4.இலக்கணமுடையது என்றால் என்ன?

 இலக்கண நெறியால் வருவது இலக்கணமுடையது எனப்படும். 

 உ+ம்: நிலம், நீர், தீ, காற்று.

 

5. இலக்கணப் போலி என்றால் என்ன? 

 இலக்கணம் இல்லையாயினும் இலக்கணமுடையது போல் அடிப்படைச் சான்றோரால் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருவது இலக்கணப் போலி எனப்படும், 

 உ+ம்: 

 நகர்ப்புறம் - புறநகர்

 கண்மீது   -    மீ கண் 

 கோவில் -      கோயில் 

 இல்முன் –     முன்றில்

 

6.மரூஉ என்றால் என்ன? 

தொன்று தொட்டு வருதலின்றி இடையிலே சில எழுத்துக் கெட்டும், சில எழுத்துத் திரிந்தும், சில எழுத்துத் தோன்றியும் இலக்கணத்திற் சிதைந்து தானே மருவி வழங்குவது மரூஉ எனப்படும். 

உ+ம்: 

இலக்கணமுடையது                                          மரூஉ 

சோழனாடு                                                           சோணாடு 

அருமருந்தன்ன பிள்ளை                                அருமந்தபிள்ளை

வாழ்நாள்                                                              வாணாள்



7. தகுதி வழக்கு என்றால் என்ன? 

ஒரு பொருளை அறிவதற்கு அமைந்து கிடந்த இயல்பான சொல்லாற் சொல்வது தருதியன்று. என்றும் வேறொரு சொல்லாற் சொல்வதே தகுதியென்றும் நினைத்துக் கூறுதல் தகுதி வழக்கு எனப்படும்.

 

8.தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்? அவை எவை? 

மூன்று வகைப்படும். அவையாவன:

1) இடக்கரடக்கல் அல்லது இடக்கர் அடக்கல் 

2) மங்கலம் 

3) குழூஉக்குறி

 

9.இடக்கரடக்கல் என்றால் என்ன? 

நன்மக்களிடத்தே சொல்லத் தகாத சொல்லை அவ்வாய்ப்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்வது இடக்கரடக்கலாகும். 

உ+ம்:

மலங்கழுவி வருவேன் என்பதை கால்கழுவி வருவேன் என்பதும்  பீ என்பதைப் பகரவீ, பவ்வீ என்பதும் இடக்கரடக்கலே ஆகும். 

 

10.மங்கலம் என்றால் என்ன? 

மங்கலமில்லாததை ஒழித்து மங்கலமாகச் சொல்வது மங்கலமாகும். 

உ+ம்: 

மங்கலமில்லாதது                                மங்கலமானது

செத்தார்                                                  துஞ்சினார் 

இடுகாடு                                                   நன்காடு 

ஓலை                                                         திருமுகம்

 

11.குழூஉக்குறி என்றால் என்ன? 

ஒவ்வொரு கூட்டத்தார் யாதாயினும் ஒரு காரணம் பற்றி ஒரு பொருளினது சொற்குறியை ஒழித்து வேறொரு சொற்குறியாற் சொல்வது குழூஉக்குறியாகும். 

உ+ம்: 

பொற்கொல்லர் பொன்னைக் குறிப்பது - பறி 

வேடர் கள்ளைக் குறிப்பது  - சொல்விளம்பி 

யானைப் பாகர் ஆடையைக் குறிப்பது - காரை