நிறுத்தற் குறிகள்
தரம் 7 பாடம் 2:2.1

ஒரு விடயத்தைச் சரியாக வாசித்து அதற்குரியப் பொருளைப் புரிந்து கொள்வதற்கு நிறுத்தற் குறிகள் பயன்படுகின்றன. இக் குறியீடுகளை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்துவது அவசியமாகும்.
1. காற்புள்ளி ( , )
(அ) ஒரு வாக்கியத்தின் தேவைக்கேற்ப வரும் சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு இக்குறியீடு பயன்படுகிறது.
-
உதாரணம் – என் வகுப்பறையில் கதிரை, மேசை, கரும்பலகை, வெண்கட்டி, மாணவர் இடாப்பு என்பன இருக்கும்.
(ஆ) வாக்கியத்தில் பொருள் மயக்கம் ஏற்படுமிடத்துத் தெளிவு படுத்திக் காட்டுவதற்குக் காற்புள்ளி பயன்படுகின்றது.
-
உதாரணம் - கமலா, சுந்தரி இருவரும் நெருக்கமான தோழிகள்.
(இ) முகவரியை எழுதும் போது ஒவ்வொரு பகுதியையும் பிரித்துக் காட்டுவதற்காகக் காற்புள்ளி இடப்படுகின்றது.
-
உதாரணம் - இல.54, பிரதான வீதி, மட்டக்களப்பு.
(ஈ) ஒருவரை அல்லது ஒன்றை விளித்துக் கூறுமிடத்தில் காற்புள்ளி இடப்படும்.
-
உதாரணம் - மதிப்பிற்குரிய, ஐயா, அம்மணி,
2. முக்காற்புள்ளி ( : )
ஒரு விடயத்தை விளக்குவதற்கு முன்பே இடப்படும் குறியீடாகும்.
உதாரணம் -
-
தலைவரைச் சந்தித்ததும் எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த கூட்டம் எப்போது?
-
பெயர் : தமிழ்ச்செல்வி
3. முற்றுப்புள்ளி ( . )
ஒரு வாக்கியம் முற்றுப் பெற்றதை உணர்த்துவதற்காக இடப்படுவதே இக்குறியீடாகும்.
-
உதாரணம் - நான் பாடசாலைக்குச் சென்றேன்.
4. வினாக்குறி ( ? )
இது விடையினை எதிர்பார்த்து வினவப்படும் வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் குறியீடாகும்.
உதாரணம்
-
மலரும் மாலையும் என்னும் நூலை எழுதியவர் யார்?
-
நீங்கள் நேற்று எங்கு சென்றீர்கள்?
5.மெய்ப்பாட்டுக்குறி/வியப்புக்குறி ( ! )
உணர்ச்சிகளை உணர்த்தும் சொல்லை அடுத்து இடம் பெறும் குறி வியப்புக்குறி ஆகும்.
உதாரணம்
-
அடடா! எத்தனை புதுமை.
-
ஐயோ! இப்படியாகிவிட்டதே.