தமிழ்த் தட்டச்சின் தந்தை
தரம் 7 பாடம் 7:1.1
கா.மாணிக்கவாசகரால் 1959 இல் இக்கட்டுரை எழுதப்பட்டது. சரஸ்வதி களஞ்சியம் என்ற இதழில் இருந்து எடுக்கப்பட்ட இக்கட்டுரை, முத்தையா என்பவர் தமிழில் தட்டச்சு விசைப்பலகையை உருவாக்கிய பங்களிப்பினை எடுத்துக் கூறுகிறது.
ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழி உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு ( டைப்ரைட்டர் ) ஒரு முக்கிய காரணமாகும். 1875 ஆம் ஆண்டில் “ரெமிங்டன்” தட்டச்சு வியாபாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட பொழுது, வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்னர் அரசினரும், நிறுவனங்களும், தனிமனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். நாளடைவில் ஊற்றுப் பேனாவின் உபயோகம் குறைந்து தமது எண்ணங்களைக் கைவிரல்களாலேயே பொறிக்கத் தொடங்கி விட்டனர். இன்று ஆங்கில எழுத்துத் துறையிலுள்ளவர்கள் தட்டச்சிலேயே தங்கள் கருத்துக்களைப் படைக்கின்றனர்.
எழுதும் பொழுது, எண்ணத்துடன் எழுது கோல் விரைந்து செல்வதில்லை, மிகவிரைவாக எழுதுபவர்களால் கூட வினாடியொன்றிற்கு இருபது எழுத்துக்களையே அழகாக எழுத முடிகிறது. ஆனால் அச்சடிக்கும் பொழுது சராசரி 40 முதல் 60 ஏழுத்துக்கள் வரை பொறித்து விடலாம். சிந்தையில் வேகத்துடன் விரைந்து சென்று எண்ணத்தில் உதிப்பதை எழுத்தில் பொறிக்கும் திறமைத் தட்டச்சு ஒன்றினாலேயே முடியும். ஆகவே எண்ணத்திற்கும், எழுத்திற்கும் இடைவெளி தோன்றுவதில்லை. இதனால் தட்டச்சு ஆங்கில எழுத்தாளர்களுக்கு ஓர் இன்றியமையாத சாதனமாகி விட்டது.
ஆங்கில நாட்டில் ஒரு பொறி கண்டுபிடிக்கப்பட்டால் நெடுங்காலத்திற்குப் பின்பே அது தமிழ் நாட்டிற்குப் பயன்படும். தமிழ்த் தட்டச்சைப் பொறுத்த வரையில் நாற்பது ஆண்டுகளுக்குள் அது தமிழில் அமைக்கப்பட்டதை ஒரு சிறந்த சாதனையாகக் கருத வேண்டும். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே உள்ளன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்து 18,உயிர் மெய் எழுத்துக்கள் 216,ஆய்த எழுத்து 1, ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இவைகளை விட சில முக்கிய வடமொழி எழுத்துக்களும், எண்களும், குறியீடுகளும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்திலும் பார்க்க ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களையுடைய தமிழ் மொழியை ஓர் இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விடயமல்ல. ஆங்கில மோகம் வானளாவி நின்ற அந்நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர். பெருந்தொகையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டும். பண முதலீடு செய்தாலும் விற்பனையாகுமா? இப்பிரச்சினைகளை எல்லாம் கருத்திற் கொண்டு துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.
முத்தையா அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டுக்குளியில் 24.2.1886 இல் பிறந்தார். இவர் தந்தையார் இராமலிங்கம் பண்பாடுமிக்கவர். கல்வியாளர், பக்திமான், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சீடர்களில் ஒருவராகவிருந்தார். இராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளை தான் முத்தையா அவர்கள். இவர் ஏழு வயதாயிருக்கும் பொழுதே இவரது தந்தையார் இறந்து விட்டார். பின்னர் தாயாரின் பராமரிப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருடங்களில் தாயாரும் நோய்வாய்ப்பட்டார். தான் இறக்கும் முன் இவர் வெளித்தேசம் சென்று விட வேண்டும் என்பது தாயாரின் கோரிக்கையாகவிருந்தது. அதற்கிணங்க, தாயார் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது மலாயா நாட்டிற்குப் புறப்பட 1907 ஆம் ஆண்டில் கப்பல் ஏறினார். தாயாரின் விருப்பம் பின் நாட்களில் தனது உறவினர் பலரை உயர் நிலைக்குக் கொண்டு வரக்காரணமாயிருந்தது. சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியோவுக்குப் போக எண்ணிய பொழுது டானியல் போதகர் என்பவர் தான் அங்கேயே வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரெயில்வே இலாகாவில் வேலைக்கமர்த்தினார். சில நாட்களில் இவ்வேலையை விட்டு 'ஐல்ஸ்பெரி அன் கார்லன்ட்' என்ற பிரபல வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார்.
இரண்டாண்டுகளுக்குப் பின் அதன் பிரதம குமாஸ்தாவாக அங்கே பதவி உயர்த்தப்பட்டு 1930 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இக்காலத்தில் அவர் உயர்தர கணக்குப்பதிவு, பொருளாதாரம், தட்டச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913 இல் நடைபெற்ற ‘ஸ்லோன் டுப் ளோயன்’ சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அத்துடன் ஆங்கில தமிழ் இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்களையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவர் அரசாங்க உத்தியோகத்தை நாடியதேயில்லை. சுய முயற்சியில் அதிக நம்பிக்கையுடையவர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் எடுத்துச் சொல்வார்.
இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்திலிருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது எனச் சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே அன்றிலிருந்து இம்முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஒரு அறையிலிருந்து 247 எழுத்தின் வடிவத்தை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறுபக்கத்திலும் வைத்து எழுத்துக்களை எவ்வாறு விசைகளில் அமைப்பது எனச் சிந்தித்தார். கிடைத்த நேரத்தையெல்லாம் இவ்வாராய்ச்சிக்கே செலவிட்டார். தனது ஆங்கிலப் பொறியியல் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.
இலங்கையிலும் இந்தியாவிலுமுள்ள தமிழன்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்பிராயங்களையும் சேகரித்தார். எத்துணை முயற்சி செய்தும் எழுத்துக்களை 72 க்கு மேல் குறைக்க முடியவில்லை. அது வரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்.
முத்தையா தான் கண்டு பிடித்த தட்டச்சை ‘ஸ்டான்டர்ட்’ பெரிய தட்டச்சு என அழைத்தார். அது சிறப்பான பல அம்சங்களையுடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவைகள் எல்லாவற்றையும் நான்கு நிறைகளிலுள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. இதனால் பல எழுத்துக்களுக்குப் பொதுவாகவுள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடியதாக விசைப்பலகையை அமைக்க வேண்டும்.
ஆகவே இரண்டு விசைகளை அழுத்திய பின்னரே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரிசோதனைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது ‘தி’ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள த- வை அடித்த பின் தான் அச்சு நகரும்.
மெய் எழுத்துக்களும், அகர உயிர் சேராத உயிர் மெய் எழுத்துக்களும் இவ்வாறே அச்சிடப்படுகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கின்றனர்.
இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகளில் இரு கைவிரல்களுக்கும் சமமாக வேலைக் கொடுக்கப்படுவதில்லை. இக்குறை இவரது தட்டச்சில் தவிர்க்கப் பட்டிருக்கின்றது. தமிழெழுத்துக்களில் ய,ள,க,ப,ர,ம,ட,ந,ச,வ,ல,ர,ன,டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகிக்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆகவே அரசினரின் விசைப்பலகையின் கீழ் இடத்தில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. முத்தையா அவர்களது விசைப் பலகையமைப்பு இதையொட்டியே இருக்கிறதென்றால் அவர்கள் எத்துனை ஆராய்ச்சியின் பின் இதனை உருவாக்கியிருக்க வேண்டுமென நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
முதலாவது உலக யுத்தம் முடிந்த பின், தான் கண்டுபிடித்த விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள ‘சைடல் அன் நௌமான்’ என்ற நிறுவனத்திடம் ஒப்புவித்து அச்சுகளை உருவாக்கினார் . பெருந்தொகையில் அதனை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இத்துடன் அவரது முயற்சி முற்றுப் பெறவில்லை. தான் அமைத்த விசைப்பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்கி 'பிஜோ’, ‘ஐடியல்’ ஆகிய ‘போர்ட்டபிள்’ தட்டச்சுகளை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றி ‘ஆர்.ஸி','எரிகா', ‘யுனியா','ஹல்டா’ முதலிய தட்டச்சுகள் வெளியாகின.
தமிழ் தட்டச்சின் தந்தை திருவாளர் ஆர்.முத்தையா அவர்களின் சேவைகளுக்கு தமிழுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
கா. மாணிக்கவாசகர்.