சுகாதாரக் கும்மி
தரம் 6 பாடம் 9:1.1
சுகாதாரக் கும்மி
பாவையரே! எந்தன் பாங்கியரே! – கும்மி
பாடி விளையாடும் தோழியரே!
ஆவலொடு சுக வாழ்வை அடைவதற்கு
ஆகும் வழிகளைத் தேடுவீரே
உள்ளம் உடலையே பற்றி நிற்கும் – இந்த
உண்மை மறந்திட லாகா தம்மா!
தெள்ளத் தெளிவந்த அறிவுடை யோர் மொழி
தெய்வ மொழியென் ருணர்வாய், அம்மா!
மாசோடறியாமை நேசமாகித் – தம்முள்
வாய்த்த மணஞ்செயும் காரணத்தால்
பேசும் உலகினில் நோய்கள் எனும்பல
பிள்ளைகள் வந்து பிறக்கு தம்மா!
சுத்தமே என்றும் சுகம் அளிக்கும் – தீய
சோம்பலை ஓட்டித் துரத்தும், அம்மா!
இத்தரை வாழ்வைப் பெருக்கும், அம்மா – அதற்கு
ஈடேதும் இல்லை யான் சொன்னேன் அம்மா!
ஏதும் அழுக்கிலா ஆகாயமே – உடற்கு
என்றும் உறுதி பயக்கும், அம்மா!
மோது கடற்கரை சென் றுலவி – உண்மை
முற்றும் தெளிவுறக் காண்பாய், அம்மா!
கந்தையானாலும் கசக்கியுடு – என்னும்
கற்பனை போற்றி நடப்பாய், அம்மா!
சுந்தர மேனியுண்டாகும் அம்மா! – இந்தச்
சுத்தத்தின் நன்மை சிறிதோ? அம்மா!
வேலை செய் யாது சோம்போறிகளாய் – நிதம்
வீட்டிலிருப்பது ஆகாதம்மா!
மூலையிலிட்ட இரும்பு துருவேறி,
மோசமாய்ப் போவதும் கண்டிலையோ?
நோய்கள் உடலை அணுகிடாமல் – ஆயுள்
நூறினும் மேலாய் வளரும் அம்மா!
தீயஉணவை அகற்றும், அம்மா! – வேலை
செய்திட நித்தம் பழகும் அம்மா!
நித்தமும் நோயாளி யாகி,ஐயோ! – கட்டிலில்
நீங்காது நீண்டு கிடப்பவர்க்கு
எத்தனை செல்வம் இருந்திடினும் – அதில்
யாதும் பயன் உண்டோ? சொல்லும், அம்மா!
- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை -