மாத்திரை
தரம் 8 பாடம் 1:4.8
மாத்திரை
ஓர் எழுத்தை உச்சரிக்கும் கால அளவினை (உச்சரிக்க எடுக்கும் நேரம்) நாம் மாத்திரை என்போம்.
ஒரு மாத்திரை என்பது,
"இயல்பு எழும் மாந்தர் இமை, நொடி மாத்திரை" என இலக்கண நூல்கள் கூறுகின்றன.
அதாவது ஒரு மாத்திரை என்பது ஒருவர் இயல்பாகக் கண் இமைக்கும் காலம் அல்லது விரல் நொடிக்க எடுக்கும் காலம்.
உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் உச்சரிக்கும் பொழுது ஒரு மாத்திரை அளவை எடுப்பன. எனவே இவற்றை குறில் அல்லது குற்றெழுத்துக்கள் என்போம்.
உயிர் எழுத்துக்களில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய 7 எழுத்துக்களும் உச்சரிக்கும் பொழுது இரண்டு மாத்திரை அளவை எடுப்பன. எனவே இவற்றை நெடில் அல்லது நெட்டெழுத்துக்கள் என்போம்.
ஆய்த எழுத்துக்கு மாத்திரை 1/2 ஆகும்.
உயிர் மெய்யெழுத்துக்கள் - உயிர் எழுத்தின் மாத்திரையைப் பெறும்
உதாரணம் :-
க் + அ - க - 1 மாத்திரை
க் + ஆ - கா - 2 மாத்திரை
மெய்யெழுத்துக்களையும் நாம் கீழ் வருமாறு பாகுப்படுத்துவோம்.
உதாரணம்
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்
மெய்யெழுத்துக்கு மாத்திரை 1/2 ஆகும்.
க ச ட த ப ற - வல்லினமாம்
ங ஞ ணந ம ன - மெல்லினமாம்
ய ர ல வ ழ ள - இடையினமாம்
இவற்றைத் தனித்தனியாக உச்சரித்துப் பார்த்தால் வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய்யெழுத்துக்களைப் பகுத்தமைக்கான கரணம் புரியும்.
மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய இடங்களிலேயே எழுத்துக்கள் பிறந்தது, உதடு, நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகள் ( எழுத்துக்கள் ) பிறக்கின்றன.
வல்லின எழுத்துக்கள் - மார்பிலிருந்து பிறக்கின்றன.
மெல்லின எழுத்துக்கள் - மூக்கிலிருந்து பிறக்கின்றன.
இடையின எழுத்துக்கள் - கழுத்திலிருந்து பிறக்கின்றன.
உயிர் எழுத்துக்களின் பிறப்பிடம் கழுத்து ஆகும்.