பதங்களையும் அதன் வகைகளையும் அறிதல்.
கேள்விக்கான விடையை சுருக்கமாகத் தருதல்.

1. பதம் என்றால் என்ன?
தனித்து ஓர் எழுத்தேனும், ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களேனும் பொருள் தருமாயின் அது பதம் எனப்படும்.
உ+ம்:-
ஆ (பசு) - தனித்து ஓர் எழுத்து
மரம் - ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள்
2. ஓர் எழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
ஓர் எழுத்துத் தனித்து நின்று பொருள் தருமாயின் அது ஓர் எழுத்தொரு மொழி எனப்படும்.
உ+ம்:-
ஆ (பசு) கா (சோலை) மா (பெரிய) கோ (மன்னன்) (துன்பப்படு) து (உண்)
3. ஓரெழுத்தாலாகிய மொழிகளுள் சிறப்புடையவை எனக் கொள்ளப்படுபவை எத்தனை?
நாற்பத்திரண்டு
4.தொடர் எழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் பொருள் தரப் பொருந்தி, தொடர்ந்து நின்று பொருள் தருமாயின் அது தொடரெழுத்தொரு மொழி எனப்படும்.
உ+ம்: அலை, அன்பு, கானகம், புத்தகம்…
5.பதம் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
1) பகுபதம்
2) பகாப்பதம்
6.பகுபதம் என்றால் என்ன?
பகுபத உறுப்புக்களாகப் பகுக்கக் கூடியதும், அவ்வாறு பகுப்பதால் பொருட்பயனுடையதாகவும் விளங்குஞ் சொல் பகுபதம் எனப்படும்.
உ+ம்: படித்தான் படி + த் + த் + ஆன்
7.பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன
1) பெயர்ப் பகுபதம் உ+ம்: கண்ணன்
2) வினைப் பகுபதம் உ+ம்: படித்தான்
8. பெயர்ப் பகுபதங்களாக வரும் பெயர்ச் சொற்கள் எவை?
1) பொருட்பெயர் உ+ம்: பொன்னன்
2) இடப் பெயர் உ+ம்: அகத்தன்
3) காலப் பெயர் உ+ம்: ஆதிரையான்
4) சினைப் பெயர் உ+ம்: கண்ணன்
5) குணப் பெயர் உ+ம்: கரியன்
6) தொழிற் பெயர் உ+ம்: ஊணன்
9.வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
1) தெரிநிலைவினைப் பகுபதம் உ+ம்: படித்தான்
2) குறிப்புவினைப் பகுபதம் - உ+ம்: கரியன்
10.பகுபத உறுப்புக்கள் எவை?
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனும் ஆறும் பகுபத உறுப்புக்களாகும்.
11.பகுதி என்றால் என்ன?
பெயர், வினைப் பகுபதங்களின் முதலில் நிற்கும் கூறாகிய பகாப்பதமே பகுதி எனப்படும்.
உ+ம்:
கண்ணன் - கண் + ண் + அன் (பகுதி கண்)
படித்தான் - படி + த் + த் + ஆன் (பகுதி படி)
12.பெயர்ப் பகுபதங்களுக்கும், குறிப்புவினைப் பகுபதங்களுக்கும் பகுதிகள் எவை?
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறு வகைப் பெயர்ச் சொற்களும் சிறுபான்மை இடைச்சொற்களும் பகுதிகளாய் வரும்.
13.தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
பெயர்ச்சொற்கள் - உ+ம்: சித்திரித்தான் (சித்திரம்)
வினையடிகள் - உ+ம்: நடந்தான் (நட)
இடைச்சொற்கள் - உ+ம்: போன்றான் (போல்)
உரிச்சொற்கள் - உ+ம்: சான்றான் (சால்)